கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தவெகவைச் சேர்ந்த கனிமொழி. இவர் நேற்று அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதுடன், அந்த புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்காக தவெகவைச் சேர்ந்தவர்களே தங்களது எம்எல்ஏவான கனிமொழியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மக்களின் குறைகளைக் கேட்கவும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடவும் களத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்துவது முறையல்ல என்றும், தவெக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், பெரிய சோபாவில் தனியாக கனிமொழி அமர்ந்து பேசுவதையும் அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.


