கோவை: விஜயை வரவேற்க வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த சூலூர் வேட்பாளர் சுகுமார், கூட்ட நெரிசலில் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கோவை வந்தடைந்தார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய்க்கு, அவரது கட்சியினரும் ரசிகர்களும் அவிநாசி சாலையில் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து அவர் பிரச்சார வாகனம் மூலம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கப் புறப்பட்டார்.
கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே, சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து கட்சித் தலைவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கக் காத்திருந்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகச் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றிருந்த அவர், விஜய் அந்த இடத்திற்கு வந்து வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகச் செயல்பட்ட அவரது ஆதரவாளர்கள், அவரை மீட்டுச் சாலையோரம் அமரவைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சுகுமார் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார். தற்போது விஜய் அவர்கள் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.


