கோவை: 5-ம் நம்பர் பேருந்தில் டிரைவருடன் லோலாய் செய்த இளம்பெண் வீடியோ வைரல்; நடவடிக்கை கோரி பயணிகள் கோரிக்கை.
கோவை, சிவானந்தா காலனி வழித்தடத்தில் இயங்கும் 5-ம் எண் தனியார் பேருந்தில், இளம்பெண் ஒருவர் ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே இருக்கும் கியர் பாக்ஸ் மீது ஏறி அமர்ந்து கொண்டு, பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே டிரைவருடன் கொஞ்சிப் பேசி லோலாயில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் உயிரோடு விளையாடும் இந்த ஆபத்தான செயல்களை, அதே பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வேதனையை பதிவு செய்துள்ளார்.
கோவை சிவானந்தா காலனியில் இருந்து ராமநாதபுரம் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாடப் பயணத்திற்காக அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகளை நம்பி உள்ளனர்.
இந்த வழித்தடத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் “அப் அண்ட் டவுன்” இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த ரூட்டில் இயங்கும் “வெங்கடேஸ்வரி” என்ற தனியார் பேருந்தில் (ரூட் நம்பர் 5) நேற்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு டவுன்ஹால் பகுதியில் இருந்து சிவானந்தா காலனி வழியாக வந்துள்ளது.
அப்போது, அந்தப் பேருந்திற்குள் ஏறிய இளம்பெண் ஒருவர், பயணிகள் அமரும் இருக்கைக்குச் செல்லாமல், நேராக ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் (Gearbox) அமைந்துள்ள அந்தச் சிறிய இரும்புப் பகுதியின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.
பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண் ஓட்டுநருடன் மிகவும் நெருக்கமாகச் சிரித்துப் பேசிக்கொண்டும், அவரது கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் காதலர்களா? அல்லது கணவன் – மனைவியா? என்ற விவரம் தெரியவில்லை.
இருப்பினும், நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒரு பிரதான பேருந்தின் ஓட்டுநர், சாலையை உற்று நோக்கி கவனமாக வண்டியை இயக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொதுவெளியில் முகம் சுளிக்கும் வகையில் பெண்ணுடன் அரட்டை அடிப்பது பெரும் விபத்திற்கு வழிவகுக்கும் எனப் பயணிகள் கொந்தளித்துள்ளனர்.
லேசான கவனச் சிதறல் ஏற்பட்டால்கூட பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதை அந்த டிரைவர் உணராமல் லோலாயில் மூழ்கியுள்ளார்.
வீடியோ
இந்த ஆபத்தான காட்சியை பேருந்தின் பின் சீட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் பயணி, இவர்களின் இந்த அலட்சியப் போக்கை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்.
மேலும், “இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பயணப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் அந்த ஓட்டுநர் மீதும், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து நிறுவனம் மற்றும் கோவை வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.




Need serious action on Driver as well as the lady required and must