கோவை: மதுப்பழக்கம் இல்லாத இளைஞர் மீது பொய் வழக்கு போடுவதா? என ஆதங்கத்துடன் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசுப் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயதான கதிரேசன் என்ற இளைஞர். இவர் கடந்த 5ம் தேதி இரவு இடுவாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கதிரேசன் உயிரிழந்தார்.

இந்நிலையில் அந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு தான் இந்த விபத்திற்கு காரணம் என்றும் அது குறித்து புகார் அளித்தால் திருப்பூர் காவல் துறையினர் புகாரை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழிப்பதாகவும் மாறாக அரசு பேருந்து ஓட்டுனர் கொடுத்த பொய்யான புகாரை பெற்றுக்கொண்டு கதிரேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு கதிரேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கதிரேசனுக்கு குடிப்பழக்கம் இல்லாத நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர் அளித்த பொய் புகாரின் பெயரில் கதிரேசன் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிந்துள்ளதாகவும் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த பந்தய சாலை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வலியுறுத்தினர் இருந்த பொழுதிலும் உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் உங்கள் புகாரை கோவை மாநகர காவல் ஆணையாளர் அல்லது திருப்பூர் காவல் ஆணையாளரிடம் அளிக்கும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட அவர்கள் திருப்பூர் காவல் துறையினரிடம் புகார் அளிக்க புறப்பட்டனர்.

