கோவை: சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், காதல் திருமணம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மனித சமூகம் தோன்றியது முதலே காதல் தோன்றியதாகவும் இது இயற்கையானது என தெரிவித்தார். இன்றைய தினம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் காதலை எதிர்ப்பதாகவும் அதற்குக் காரணம் சாதி மதம் என்ற கட்டுமானம் உடைந்து விடும் என்பதுதான் என குறிப்பிட்டார்.
காதல் என்று வந்து விட்டால் சாதி மதம் மறுப்பாக மாறிவிடும் என்று பலரும் நினைப்பதாகவும் தமிழகத்தில் பெரியார் தோன்றி திராவிட இயக்கங்கள் தோன்றி பெண்ணுரிமைகள் மேலோங்கி இருக்கக்கூடிய நிலையில் கல்வி அறிவியல் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் காதல் திருமணங்களும் சாதி மறுப்பு திருமணங்களும் வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதி மறுப்பு திருமணங்கள் இங்கு நடத்தப்பட்டு இருப்பதாகவும் அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் சிறப்பாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

