கோவை: வெள்ளியங்கிரி மலை சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையேற்றத்திற்குவரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், மலையேற்றத்தின் போது பக்தர்கள் பீடி, சிகரெட் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் விதமாக பைரவா என்ற மோப்பநாய் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை

இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு சென்று திரும்பிய பக்தர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் மாடசாமி (25). இவர் கோவை உக்கடத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் முன்தினம் இரவு மாடசாமி தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலை பைக்கில் வீடு திரும்பினார்.
அவரது வாகனம் உக்கடம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து மாடசாமி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த மாடசாமியை மீட்ட அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாடசாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

