கோவை: சாதி மதம் என்று எளிதில் பற்றக்கூடியவற்றை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து வெளியேறிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் இக்கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் வேல்முருகன் கலந்துகொண்டு அக்கட்சி பற்றியும் அதன் கொள்கைகளை பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன், இன்றைய தினம் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் மகளிர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைகிறார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் நாங்கள் எங்கள் கட்சியின் உட்கட்டமைப்புகளை பலப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
நேற்று நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய 2.5 லட்சம் மக்கள் 50 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் சீமா பண்டாரநாயக்கா சாஸ்திரிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இறக்கி விடப்பட்ட ஐந்தரை லட்சம் பூர்வ குடி மக்கள், தற்பொழுது வரை வீடு நிலம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் பிரச்சனை குறித்து நேற்றைய மாநாட்டில் குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.
தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நடந்து அதற்கு சர்வதேச நீதி விசாரணை கோர முடியாமல் தமிழ் சமூகம் அங்கு தவிர்த்து வருவதாகவும், அதற்கு தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர் அங்கு நடந்தது இனப்படுகொலை சர்வதேச நீதி விசாரணை அதற்கு நடத்தப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் வாழுகின்ற ஈழத் தமிழர் உறவுகளிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனித்தமிழ் சுதந்திர அரசை உருவாக்கித் தர தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வலுவாக இருக்கக்கூடிய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சேர்ந்து சர்வதேச அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும். அடுத்த மாதம் இதற்கான ஒருங்கிணைப்பை தயார் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் அரசியல் என்பது எங்களை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பது போராடுவது தான், அதுவரை தமிழ் மொழி தமிழர் தமிழர் வாழ்வுரிமை தமிழ் சமூகத்தின் சிக்கல்கள் குறித்து எங்கள் பயணம் தொடரும் என்றார்.
ஈழத் தமிழர்கள் குறித்து ஜெயலலிதா இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் ஒன்றிய பாஜக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. அப்படிப்பட்ட அந்த அரசுக்கு தான் தமிழக மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தார்கள் என தெரிவித்தார். தற்பொழுதும் எங்கள் கோரிக்கைகள் அப்படியே உள்ளது என்றார். ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்ற பொழுது பல்வேறு மாநிலங்களுக்கு நிதி வாரி வழங்கப்பட்டது, ஆனால் தமிழகத்திற்கு என்று எந்த திட்டங்களும் இல்லை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கூட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது, புதிய ரயில்வே திட்டங்களுக்கு பணம் இல்லை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பணம் இல்லை, நீண்ட தூர அகல பாதைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ் சமூகம் சந்திக்கக்கூடிய எந்த பிரச்சனைகளுக்கும் மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் பாஜக அரசு இதற்கான விலையை சந்திக்கும் என தெரிவித்தார். இதையெல்லாம் சிந்தித்து தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவேடுப்பார்கள் என குறிப்பிட்டார்.
பாஜக என்கின்ற அரசியல் கட்சி தமிழர் விரோத இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் சமத்துவத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் சமநீதி சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது பிற மாநிலங்களில் அவர்களுக்கு வெற்றியை தேடி தந்திருந்தாலும் தமிழகத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் என்னுடைய கருத்து என கூறினார்.
200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம் என்று பாஜக கூறியதாக தெரியவில்லை ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார் அவர் அவ்வாறு கூறுவதும் அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வரும் என்கின்ற நம்பிக்கையில் தான் என்றார். அதிமுகவையே ஓரம் கட்டி விட்டு தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும் என அவர்கள்(பாஜக) கூறுகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திற்கு முதலமைச்சர் என்று அமித்ஷா, நரேந்திர மோடி இருவருமே அறிவிக்கவில்லை, எனவே அதிமுகவை சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அரசு இயந்திரங்களை கொண்டு பணிய வைக்கலாம் என்று பாஜக கனவு காணுகிறது கடந்த நாடாளுமன்றத்தில் எப்படி சுயமரியாதையோடு எடப்பாடி பழனிச்சாமி அதனை எதிர்கொன்றாரோ அதேபோன்று இதனையும் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு வாய்ப்பில்லாத பக்குவப்பட்ட சமதர்ம பூமி தான் தமிழக நிலம் என தெரிவித்தார்.
இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது அமையப்பெறவில்லை என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது சரியாக இருக்குமா? என்ற கேள்விக்கு, கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுக்கின்ற இடத்தில் உள்ள திமுக அதிமுக போன்ற கட்சியின் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டும் அப்பொழுது தான் அது சாத்தியமாகும் என தெரிவித்தார்.
கூட்டணியில் இடம் பிடிக்கக்கூடிய கட்சியின் ஆசைகளை நிறைவேற்றுகின்ற இடத்தில் அவர்கள் தான் உள்ளார்கள் அதற்காக விட்டுக் கொடுப்பேன் அந்தந்த கட்சியின் தலைமைகள் தான் முடிவு செய்ய வேண்டும், அந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைப்போம் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அதிகார பகிர்வை அளிப்போம் என்று எந்த இடத்திலும் தற்பொழுது வரை தெரிவிக்கவில்லை ஆதலால் அது தற்பொழுது வரை தமிழகத்தில் சாத்தியம் இல்லை என தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை எங்கும் சாதி சண்டைகள் இல்லாமல் மதவெறி இல்லாமல் தமிழ் சமூகம் பன்னெடுங்காலமாக பண்பட்ட புரிதல் உள்ள அறிவார்ந்த சமூகமாக இருந்து வருகிறது இந்த அறிவார்ந்த சமூகத்தில் மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தும் அரசியல் தமிழகத்தில் இதுவரை எடுபட்டதில்லை இதற்கு மேலும் அது எடுபடாது என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி குறித்து பேசிய அவர், அந்த கட்சி சரியில்லாதது போன்று தெரிவதாகவும் தமிழகத்தில் சமூக நீதியை பேசி வளர்ந்த கட்சி அது, நூற்றுக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக இருந்த கட்சி பாமக. ஆனால் இன்று அப்பா மகன் பிரிவினையின் காரணமாக சமூக நீதிக்காக தொடங்கப்பட்டு சமூக நீதிக்காக உயிர்களை துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்து வளர்ந்து வந்த ஒரு அரசியல் கட்சி இன்று அதன் அதிகாரத்தை அப்பா மகன் பிரச்சனையின் காரணமாக இழப்பது என்பது சமூக நீதிக்கு ஏற்றதாக தெரியவில்லை என கூறினார்.
இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும் அந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் செல்லாத நாட்டினுடைய மத்திய அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்துறை அமைச்சர் பாஜக முதலமைச்சர்கள் எல்லாம் நேற்று கோவையில் ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்று உள்ளார்கள், ஈஷாவில் அத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மதத்தின் பெயரால் மக்களை அணிதிரட்டும் முயற்சிக்கு செலவிடுகின்ற நேரங்களை மதங்கள் ரீதியாக பிரிக்கும் முயற்சிக்கு செலவிடுகின்ற நேரங்களை இந்த மண்ணின் வாழ்வுரிமை சிக்கல்களுக்காக செலவிட்டு உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது என்றும் தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்டு தருவோம் மீனவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றெல்லாம் பாஜகவினர் கூறினார்கள். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இலங்கையில் உள்ள அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது பொது இடத்தில் அதனை விடுவதை என்ற புதிய சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் அதைக் கூட தட்டி கேட்காத ஒன்றிய அரசாகத்தான் பாஜக அரசியல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பாஜக வல்லபாய் பட்டேலுக்கு 2000 கோடி செலவு செய்து சிலை வைப்பார்கள் மத வழிபாட்டு தளங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்குகிறார்கள். ஆனால் உலகிக்கலாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசின் நிதி ஒரு ரூபாய் கூட இல்லை என தெரிவித்தார். ஆனால் பேசப்படாத மொழி சமஸ்கிருதம் மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
கீழடி அகழ்வாராய்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது கொடுமணல் அகழ்வாராய்ச்சிக்கான அங்கீகாரம் இல்லாமல் உள்ளது பூம்புகார் அகழ்வாராய்ச்சி தொடங்கப்படவில்லை இதெல்லாம் தமிழ் தமிழ்நாடு தமிழர் பெருமை ஆகியவை உலக அளவில் சென்றடைவதை தடுக்கக்கூடிய நோக்கம் கொண்டது என தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வாயளவில் மட்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பிரதமர் பேசுவார் என்று சுட்டிக் காட்டிய அவர் திருக்குறளை தவறாக பேசுவதற்கு முயற்சிப்பார். ஆனால் உண்மையாக தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதுவும் செய்யவில்லை.
மத்திய அரசு நடத்துகின்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி இல்லை என தெரிவித்தார். தமிழ் படிக்காமலேயே பட்டம் பெறலாம் என்கின்ற அவலம் கூட இந்த மாநிலத்தில் நிலவுவதாகவும் விமர்சித்தார். முற்றிலுமாக தமிழை கலைத்து ஹிந்தியை திணித்து இந்தி மக்களையும் திணித்து ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுகள் ஒரே ஓட்டுரிமை என்று கொண்டு வர முயற்சிக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வட மாநில மக்கள் பலரும் வாக்களிப்பதற்கு வாக்குரிமைகளை பெற்று உள்ளார்கள். அது தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை தரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்தந்த மாநில மக்கள் அந்தந்த மாநிலத்தில் தான் வாக்குகளை செலுத்த வேண்டும் பிற மாநிலத்தில் சென்று அங்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என தெரிவித்தார். அவ்வாறு செய்வது இந்த மண்ணில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடுபவர்களை அகற்றக் கூடிய நிகழ்வு என்றும் விமர்சித்தார்.
மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய விஷயம் தான் சாதியும் மதமும் என குறிப்பிட்ட அவர் அதனை கையில் எடுத்து தான் அவர்களது ஆட்சியை இந்தியா முழுவதும் நிறுவுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார். அதனைத் தான் பல்வேறு மத்திய அமைச்சர்கள் எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தை பாபர் மசூதி போன்று ஒரு பிரச்சனை ஆக்குவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார் என்றால் அவருடைய ஆழ்மனதில் அது உள்ளது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜண்டாவில் எந்த மசூதிகள் எந்த சர்ச்சுகள் இடிக்கப்பட வேண்டும் எது கைப்பற்றபட வேண்டுமென்ற டேட்டாக்களை கையில் வைத்துக் கொண்டு பணி செய்கிறார்கள் எனவும் கூறினார்.
மேலும் தமிழ் மொழி மலேசியா இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் விமான நிலையங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் எந்த விமான நிலையத்தில் தூய தமிழ் அறிவிப்புகள் உள்ளது என கேள்வி எழுப்பினார் மேலும் ஒன்றிய அரசு நினைத்தால் அதனை செய்ய முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
அதேபோன்று ரயில் நிலையங்கள் வங்கிகளிலும் செலான்களில் தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு பணிபுரிபவர்களில் 80% பேர் வட மாநில மக்கள்தான் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு ஹிந்தி மொழி பேசுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது என தெரிவித்தார். தமிழன் நாங்கள் இங்கே விழித்துக் கொண்டு இருக்காவிட்டால் தமிழர்கள் நம்மை ஒன்றிய மாநில அரசு பதவிகளில் இங்கு உயிரோடு குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்றார்.
முழுக்க முழுக்க இந்து மதத்தை சனாதன தர்மத்தை தூக்கி பிடிக்க கூடியவர்கள் தான் உயர் பதவிகளில் இருப்பதாகவும் சில உச்ச நீதிமன்ற நீதிபதிகளே சனாதன தர்மத்தின் அடிப்படையில் தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள் எனவே உச்ச நீதிமன்றம் மிரட்டப்படுகிறது தேர்தல் ஆணையம் மிரட்டப்படுகிறது தகவல் ஆணையம் மிரட்டப்படுகிறது முப்படை தளபதிகளை களைத்து ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் உள்ளவர்களை தலைமை தளபதியாக நியமிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் சர்வாதிகார ஆட்சிகளை நோக்கி பயணிப்பதற்கான திட்டங்களை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நடைமுறைப்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.


2.5 lakhs new people in Nilgiris ?.
From eelam ??
Will they participate in voting in the upcoming election?