கோவை: கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மும்பை லோக்மான்ய திலக் பகுதியில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர். அதேபோல முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இருக்கையின் அடியில் ஒரு பேக் இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் பயணிகளிடம் அந்த பேக் குறித்து விசாரித்தனர். அதற்கு பயணிகள் அந்த பேக் யாருடையது என்று தெரியவில்லை, வெகு நேரமாக உள்ளது என்றனர். அந்த பேக்குக்கு யாரும் உரிமை கோராததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பேக்கை திறந்து பார்த்தனர்.
அதில் 21 பார்சல்கள் இருந்தது. அதனையும் பிரித்து பார்த்தபோது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 21 பார்சல்களையும் போலீசார் பறிமுதல் செய்து கோவை ரயில் நிலையம் வந்ததும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அதனை ஆய்வு செய்தபோது ரூ. 11 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்ததும், கஞ்சா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் வழக்கு பதிவு செய்து அந்த கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

