கோவை: பில்லூர் அணை பகுதியில் இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அருகே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று பில்லூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதில் இரண்டு யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு யானைகளும் ஒன்றுக்கொன்று கடுமையாக மோதிக்கொண்ட நிலையில் அதில் ஒரு ஆண்யானைக்கு கழுத்து, தும்பிக்கை, கால், வயிற்று பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த அந்த ஆண்யானை தாக்குபிடிக்க முடியாமல் அங்கேயே விழுந்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் யானை உயிரிழந்திருப்பதை கண்டு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர்.

