கோவை: கோவையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் Vitamin A திரவம் வழங்கும் முகாம் தொடங்க உள்ளது.
Vitamin A என்ற உயிர்சத்து உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாகும். இச்சத்து ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டுமில்லலாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும். தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும்.
இச்சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிற மாகதடித்தல் (Bitots spot) மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும்.
கண்ணுக்கு முக்கியம்
இவற்றிற்கு தக்க சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு தேசிய அளவில் வருடம் இருமுறை Vitamin A திரவம் நாடு முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ளகுழந்தைகளுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இம்முகமானது பிப்ரவரி 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை (புதன் நீங்கலாக) கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள்/துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளது.
இம்முகாம்களில் பொது சுகாதாரதுறையில் உள்ள கிராம மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள். பகுதி சுகாதார செவிலியர்கள் இடைநிலை சுகாதார பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் துறையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 2,168 பணியாளர்கள் இணைந்து களப்பணியாற்ற உள்ளனர்.
2.6 லட்சம் குழந்தைகள்
மேலும் இம்முகாமினை மேற்பார்வையிட பொது சுகாதார துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் 315 அலுவலர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். இம்முகாமின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,66,089 குழந்தைகளுக்கு உள்ள Vitamin A திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு Vitamin A திரவத்தினை அளித்து கண்பார்வை குறைபாடில்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

