கோவை: கோவை விமான நிலையத்தில் Udaan Yatri Cafe உள்ளிட்ட புதிய வசதிகளை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கான பல்வேறு புதிய வசதிகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்க வைக்க உள்ளனர்.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை விமான நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
அப்போது கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிஃப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நாள்தோறும் 28 முதல் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர்விஸ்டா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் சேவை வழங்கப்படுகிறது.
டெல்லி, சென்னை, பெங்களூர், அகமதாபாத், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் கோவையிலிருந்து இணைக்கப்படுகின்றன. பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில் தற்போது விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
மலிவு விலையில்
இந்த நிலையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய வசதிகள் துவங்கப்பட உள்ளன. பயணிகளுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி வழங்கும் வகையில் Udan yatri cafe திறக்கப்படவுள்ளது.
இதில் குடிநீர், டீ, வடை, அதிரசம் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் ஜிஐ டேக் பெற்ற தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான விற்பனை நிலையமும் நாளை திறக்கப்படுகிறது.
கோவையின் ஜி ஐ டாக் பெற்ற கோவை கோரா காட்டன் விற்பனை நிலையம் நாளை திறக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி திறக்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் நூலகம்
மேலும், பயணிகளுக்கான நூலக வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். வீடியோ கான்பிரன்சிங்கில் இந்த வசதிகளை பிற விமான நிலையங்களிலும் தொடங்கி வைக்கின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு பகுதியின் முக்கிய விமான நிலையமாக உள்ள கோவை விமான நிலையத்தில் இது போன்ற வசதிகள் பயணிகளுக்கு சிறந்த வசதியை தரும். விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் வசதிகளை உருவாக்கும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு முகமது ஆரிஃப் கூறினார்.

