கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 2028 க்குள் முடியும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐந்து விமான நிலையங்களில் UDAN YATRI CAFE எனும் மலிவு விலை சிற்றுண்டியகம், ஆறு விமான நிலையங்களில் Digi Yatra, 39 விமான நிலையங்களில் இணைய வசதி, 3 விமான நிலையங்களில் AVSAR(Airport as Venue for Skilled Artisans of the Region), ஏழு விமான நிலையங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான பகுதி, ஐந்து விமான நிலையங்களில் நூலகம் ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல், ஆகியோர் கலந்துகொண்டு இவற்றைத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சிற்றுண்டியகத்தில் டீ, காபி, அதிரசம், குடிநீர் பாட்டில்கள் மற்றும் மெதுவடை ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியதாவது
இன்று பல்வேறு விமான நிலையங்களில் UDAN YATRI CAFE எனும் சிற்றுண்டியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூலகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, இணையதள வசதி ஆகியவை இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது .
அதுமட்டுமின்றி, கோவை, நம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாவட்டமாக உள்ளது, பிரதமர் மோடி தமிழகம் மீதும் குறிப்பாக கோவை மீதும் கோவை மாவட்டத்தின் மீதும் வளர்ச்சிக்காக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக மாநில அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு பேசி, தற்பொழுது நிறைவாக நிலம் கையகப்படுத்தி கொடுத்து வருகிறது. நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட உடன் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கும் என்றும்
தற்பொழுது உள்ள டெர்மினல் 18,000 ஸ்கொயர் மீட்டர் மட்டுமே உள்ளது, வரபோகும் புதிய டெர்மினல் 75 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் வரை இருக்கும், எதிர்வரும் 20 ஆண்டு காலங்களில் ஒன்றரை கோடி பயணிகள் வருடம் தோறும் பயணிப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கோவையில் ஐ டி, ஜவுளித்துறை சிறு குறு நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகள் உள்ளது தற்பொழுது பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பும் இங்கு நடைபெறுகிறது என குறிப்பிட்ட அவர் எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மிகப்பெரிய டெர்மினல் கட்டப்படும், மத்திய அரசு சார்பில் விமான நிலைய விரிவாக்கத்திற்காகவே 2100 கோடி அதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் கோவை விமான நிலையத்தில் முதல் தளத்தில் பயணிகளுக்காக விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைந்து நிறைவடையும் என தெரிவித்தார். புதிய டெர்மினல் கட்டும் பொழுது நம் நாட்டின் கலாச்சாரம் ஆகியவை அந்த கட்டிடத்தில் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்படும் அதற்கான டிசைன்கள் முடிக்கப்பட்டவுடன் அனுமதி பெற்று கட்டப்படும் என தெரிவித்தார்.
கோவை மட்டுமல்லாமல் பல்வேறு விமான நிலையங்களிலும் சர்வதேச விமான சேவைகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளது. அதற்காக பல்வேறு ஹப்கள் உருவாக்கி இந்திய நாட்டு விமான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். இந்தியாவில் விமானங்களுக்கான தேவைகள் என்பது அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர் என்னைப் பொறுத்த வரையிலும் சர்வதேச விமான சேவைகள் என்பதும் கோவையில் அதிகரிக்க வேண்டும் என்றார்.
விமான சேவைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இண்டிகோ பிரச்சனை நிறைவடைந்து விட்டது போதுமான விமானிகளை அவர்கள் நியமித்து விட்டார்கள் தொடர்ச்சியாக அதனை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.
2028க்குள் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவடையும் என தெரிவித்தார். தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படுமா என்ற கேள்விக்கு, நெய்வேலி மற்றும் வேலூருக்கு புதிய விமான நிலையங்கள் வருவதாகவும் நெய்வேலியில் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டதாகவும் லைசன்ஸ் காக காத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
ஓசூர் விமான நிலையம் பாதுகாப்பு துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டார். பரந்தூர் விமான நிலையம் மாநில அரசால் முன்னெடுக்கக்கூடிய திட்டம் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது, நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும், அதேசமயம் அந்த விமான நிலையத்தை யார் மேம்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய அரசை பொருத்தவரை விமான போக்குவரத்து மேம்பட வேண்டும் என்பதுதான் என்றும் புதிய மூன்று தனியார் நிறுவனங்களுக்கு தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

