இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தளங்கள் பெரிதும் வளர்ந்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய சைபர் குற்றங்களும் அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்கள் பரவலாக பயன்படுத்தப்படும் இக்காலத்தில், டிஜிட்டல் மோசடி, போலி கணக்குகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்கள் போன்றவை அதிக அளவில் பரவி வருகின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து இப்படியான குற்றச்செயல்கள் நடைபெறுவது அதிகரித்து வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டீப் ஃபேக்கில் சிக்கும் பிரபலங்கள்
சமீப காலமாக சில பிரபலங்களின் முகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உண்மையில் நடக்காத சம்பவங்களை போலி வீடியோவாக உருவாக்கி பரப்புவது பலருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோன்று, சிலர் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் பதிவிறக்கம் செய்து, அவற்றை மார்பிங் செய்து இணையத்தில் பகிரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த நபர்களின் தனியுரிமை மட்டுமின்றி அவர்களின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
‘மார்கன்’ பட நடிகை பரபரப்பு புகார்
இந்த நிலையில், தீப்ஷிகா சந்திரன் சைபர் குற்றப்பிரிவில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற அவர், தனது புகைப்படங்கள் சிலர் மூலம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டு இணையத்தில் பகிரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், தன்னுடைய புகைப்படங்களை சிலர் சமூக வலைதளங்களில் அனுமதி பெறாமல் பயன்படுத்தி பரப்பி வருவதாகவும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கடும் எச்சரிக்கை
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து இன்ஸடாகிராம் தளத்தில் தனது ஸ்டோரியின் மூலம் தீப்ஷிகா சந்திரன் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிமேல் யாராவது தனது புகைப்படங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால், சைபர் குற்றப்பிரிவு மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

டிஜிட்டல் உலகம் வேகமாக முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் எனவும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

