கோவை: கோவையில் தமிழ்ச் சங்க இலக்கியப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் மத்தியில் பொழுது போக்கிற்காகவும் அதே சமயம் தமிழ்ப் பற்று மற்றும் அறிவியல் விஷயங்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் காந்திபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்கா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கு வெறும் பூச்செடிகள் மரங்கள் மட்டுமல்லாமல் கடையேழு வள்ளல்களின் கொடை சிற்பங்கள் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி சாலையில், செசி அவன்யூ பகுதியில் தனியார் பங்களிப்புடன் தமிழ்ச் சங்க இலக்கியப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவினை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் லட்குமி இளஞ்செல்வி உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பூங்காவில் தமிழர்களின் பண்டைய கால வாழ்வியல், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஆகியவை கலைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் வாழ்வியல் முறையின் அடிப்படை அறிவை குழந்தைகளிடையே ஏற்படுத்தும் இந்த பூங்காவிற்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள் வாசகர்களே…

