கோவை: கேஸ் சிலிண்டருக்கு இறுதிச்சடங்கு நடத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
வளைகுடா நாடுகளில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் பல்வேறு டீக்கடைகள் உணவகங்கள் மூடப்படுகின்றன.
கோவையிலும் பல்வேறு உணவகங்கள் உணவு வகைகளை குறைத்துள்ளது. கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரும் அளவிற்கு இருப்பு வைக்காமல் மத்திய மோடி அரசு அலட்சியம் காட்டியதாகவும் அதனை கண்டிக்கும் விதமாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டரை ஸ்ட்ரக்சரில் வைத்து மாலை அணிவித்து இறுதி சடங்கு நடைபெறுவது போன்று நூதன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த கேஸ் சிலிண்டர் படங்களுக்கு கருப்பு பலூன் கட்டப்பட்டு வானத்தில் பறக்க விடப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், அடுப்பு அமைகின்ற நிலை மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது நடைபெற்று வரும் போரை மௌனமாக ஆதரித்து வருவதாகவும் காரணமாகவும் டிரம்ப்க்கு ஆதரவு அளித்ததன் காரணமாகவும் எளிய மக்கள் எரிவாயு தட்டுப்பாட்டில் சிக்கி உள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதாரக் கொள்கை இல்லாத காரணத்தினாலும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்ததன் காரணமாகவும் இந்திய மக்களும் சேர்ந்து வதைபடும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு செய்யும்பொழுது பலரும் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்த அவர் அதே நிலை தான் தற்பொழுது மோடி அரசால் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். 56 இன்ச் காவலராக தன்னை கூறிக் கொண்டும் வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறிக் கொண்டும் உள்ளார் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட அவர் இந்திய எல்லைக்குள்ளேயே ஈரான் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்திய கடல் எல்லைகள் பாதுகாப்பின்றி இருப்பதாக தெரிவித்தார்.

