கோவை: ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 30 வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு விமானப் பயண அனுபவத்தை வழங்கி ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ‘பிளைட் ஆப் பேண்டஸி’ (Flight of Fantasy) என்ற இத்திட்டத்தின் மூலம், வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் வாழ்வில் புதிய நம்பிக்கையைப் பெறவும், பெரிய இலக்குகளை அடையவும் ஆண்டுதோறும் விமானப் பயணம் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 13) சென்னையைச் சேர்ந்த 30 குழந்தைகள் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இத்திட்டத்தை கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் ஜெம் மருத்துவமனை ஆகியவை இணைந்து செயல்படுத்தின.
கோவை வந்தடைந்த மாணவர்கள், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களுடன் இணைந்து ஜி.டி கார் அருங்காட்சியகம், வனக் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மண்டல அறிவியல் மையம் ஆகிய இடங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இது குறித்து கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133-இன் தலைவர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், “கல்வி மூலம் சுதந்திரம் மற்றும் சமூகச் சேவை மூலம் முன்னேற்றம் என்பதே எங்களது நோக்கம். அரசுப் பள்ளி மாணவர்களின் மனதில் பெரிய கனவுகளை விதைக்கவும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டவும் இந்த விமானப் பயணம் ஒரு கருவியாக அமையும்,” எனத் தெரிவித்தனர்.
சமூக நலனில் அக்கறை கொண்டு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் ஆதரவு அளித்து வரும் ஜெம் மருத்துவமனைக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் சுபாஷ், ஸ்ரீராம், ஸ்ரீஹரி, ஈஸ்வர், கார்த்திக் குமார் மற்றும் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

