டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த விஜய், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி புறப்பட்ட விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்பான கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி விசாரணைக்காக அவர் டெல்லி செல்ல வேண்டியிருந்ததால், இன்று முன்கூட்டியே சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மதியம் காரில் சென்னை விமான நிலையத்திற்குப் புறப்பட்டார்.
விஜய் பையில் ஆயுதம்
விஜய்க்காக தனியார் விமானம் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் வழக்கமான பாதுகாப்பு சோதனை நடைபெற்றது. அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருள் இருப்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அந்தப் பொருளுடன் பயணம் செய்ய அனுமதி இல்லாததால், விஜய் தற்காலிகமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அந்தப் பையை தனது பாதுகாப்பு ஆலோசகரிடம் ஒப்படைத்தார். அதன் பின் பாதுகாப்பு அதிகாரிகள் முழுமையான சோதனை நடத்தி, அந்தப் பொருட்களை அகற்றியதும் விஜய்க்கு மீண்டும் விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு சோதனை காரணமாக விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விஜய் டெல்லி சென்றடைந்தார். தற்போது அவர் அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை நாளையும் மறுநாளும் என இரண்டு நாட்கள் நடைபெறும் என சிபிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






Comments are closed.