கோவை: பாக்கிஸ்தான் போர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கோவையை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் உயிரிழந்தார்.
1971-ல் பாக்கிஸ்தானுடனான போர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ‘பிரிகேடியர்’ வி.ஆர்.சுவாமிநாதன் மறைவிற்கு ராணுவத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1971-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் பங்கேற்று இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் (வயது 94) நேற்று கோவையில் காலமானார்.
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த வங்கதேச விடுதலைப் போரின்போது, 22-வது மராத்தா லைட் காலாட்படையின் கட்டளை அதிகாரியாக இருந்து ஹில்லி என்ற போர்க்களத்தில் தனது படையை வழிநடத்தியவர் வி.ஆர்.சுவாமிநாதன். ஹில்லி போர்க்களத்தில் பாகிஸ்தான் படையைச் தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.
போர்க்களத்தில் தோல்வியை தழுவிய ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள், வி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் சரணடைந்தனர். அந்த வகையில் போர் கதாநாயகராக அறியப்படுபவர் இவர்.
வங்கதேச விடுதலைப் போருக்கு முன்பாக 1961 கோவா விடுதலையிலும், நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவர் வி.ஆர்.சுவாமிநாதன். ராணுவத்தில் பிரிகேடியர் நிலைக்கு உயர்ந்த இவர் 1986-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
வயது முதிர்வு காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தைச் சந்தித்து வந்த வி.ஆர்.சுவாமிநாதன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 14 அன்று அவர் காலமானார். அவரது மனைவி வசந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டார்.
இந்த தம்பதியருக்கு தரங்கிணி, தீபா, ஜோதி ஆகிய மூன்று மகள்கள். மூன்றாவது மகள் இறந்துவிட்டார். அருண், சுரேஷ், சேஷாத்ரி ஆகிய மூன்று மருமகன்களும் பேரக்குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். வி.ஆர். சுவாமிநாதனின் இறுதிச் சடங்குகள் செல்வபுரம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் குடும்பத்தினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மூத்த ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

