கோவை: விளாத்திகுளம் பள்ளி மாணவி விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யின் பேச்சு மனிதத்தன்மையற்றது என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையை அடுத்த பச்சாபாளையத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்
விளாத்திகுளம் வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அவர், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பது மனிதத்தன்மையற்றது என்றார். பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூடக் கூற முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய ‘பெருமை’ என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான் என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை முனைப் போட்டி இருந்தாலும், அது திமுக மற்றும் அதிமுக இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும் என்றும், மற்றவர்கள் இடையில் வந்தவர்கள் ‘தொல்லைகள்’ போன்றவர்கள் எனவும் விமர்சித்தார். நான்கரை ஆண்டுகளாக மக்களைக் கண்டுகொள்ளாத முதல்வர், தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் வழங்குவது மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்ப்பதையே காட்டுகிறது என்றும், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதும் அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத்தான் என்றும் கூறினார்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், காவல்துறையை ஏவி விட்டுப் போராட்டக்காரர்களை ஒடுக்குவதே இந்த ஆட்சியின் வாடிக்கை என்றும் அவர் தெரிவித்தார். மனிதத்தன்மைக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள் என்றும், அது எதிர்வரும் தேர்தலில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும் என்றும் கௌதமி தெரிவித்தார்.

