கோவை: கோவை சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த பெண்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் இல்லை என்ற அதிரவைக்கும் தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாநகரின் கோவைபுதூர், மரக்கடை மற்றும் முக்கியச் சந்திப்புகளில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளை கையில் ஏந்தியபடி வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வந்தனர். வெயிலிலும், மழையிலும் குழந்தைகளை வைத்து அவர்கள் பிச்சை எடுப்பது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நேதாஜி இளைஞர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அந்தப் பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். உடனே இது குறித்து குழந்தைகள் நல வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்: கோவையில் மக்கள் உயிருடன் விளையாட்டு: காத்திருக்கும் கேபிள்கள்!
அந்தப் பெண்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பெண்கள் கையில் வைத்திருந்த குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் கிடையாது என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார்கள்? கடத்தப்பட்ட குழந்தைகளா? அல்லது பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டவர்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

