கோவை: கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3 உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் சிறுவாணி அணை நீர், மாநகராட்சியில் உள்ள மொத்த 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்ததால், மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரால் நிரம்பி காணப்பட்டன. கோவையின் சிறுவாணி அணையும் முழுமையாக நிரம்பியது.
இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த அணையில் 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரள அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே கோவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக உள்ளது.
அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு நாளுக்கு 5 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவையில் மக்கள் உயிருடன் விளையாட்டு: காத்திருக்கும் கேபிள்கள்!
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு?
இதுகுறித்து குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் கூறுகையில், “சிறுவாணி அணை கேரள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து நாள்தோறும் 10 கோடி லிட்டர் வரை குடிநீரை எடுக்க முடியும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்துள்ளதால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் மே இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பருவமழை பெய்யும் என்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றனர்.

