கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதல் தொடர்பாக போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விசாரணை கைதிகள் மணிகண்டன் (29), ஆதித்யா (22) மற்றும் காமேஷ் (24) ஆகிய 3 பேரும் கடந்த 15ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் வழக்கு விசாரணைக்காக சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங் அறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது அங்கு ஆஜராக வந்திருந்த மற்றொரு விசாரணை கைதியான பிரவீன்குமார் என்பவருடன், அவர்கள் மூவரும் முன்விரோதம் காரணமாக திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறை போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அதில் அவர்கள் சிறை போலீசாரையும் தாக்கினர்.
உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, மோதலில் ஈடுபட்ட 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் காயமடைந்த சிறைக்கைதி பிரவீன்குமாரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சிறை அதிகாரி திருமலை நேற்று ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன், ஆதித்யா, காமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


