கோவை: கோவை செஞ்சேரிமலை முருகன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
கோவை செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள புகழ்பெற்ற செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்த புதுச்சேரி மாநில முதல்வர் என். ரங்கசாமி, அங்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
முருகப்பெருமான் ஈசனுக்கு மந்திரம் உபதேசித்த தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில், தனது ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து முதல்வர் வழிபாடு நடத்தினார். இக்கோயிலில் ஜாதகத்தை வைத்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கோயிலுக்கு வந்த முதல்வரை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியார்கள் வரவேற்றனர்.
மூலவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்ட முதல்வர், கோயில் வரலாற்றையும், தலத்தின் சிறப்புகளையும் குருக்களிடம் கேட்டறிந்தார். அந்தப் புண்ணியத் தலத்தின் மகிமையைக் கேட்டு மெய்சிலிர்த்த முதல்வர், நீண்ட நேரம் பக்திப் பரவசத்துடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
பின்னர், செஞ்சேரிமலை ஆதீனத்திற்குச் சென்ற முதல்வர் ரங்கசாமி, அங்குள்ள ஆதீனத்தின் ஜீவசமாதியில் மலர் தூவி வழிபாடு செய்தார். இந்த தரிசனத்தின்போது, செஞ்சேரிமலை ஆதீனத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியாக வழங்கினார். மேலும், மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில் உண்டியலில் ரூ.50,000 காணிக்கையாகச் செலுத்தினார்.


