கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகம், போளுவாம்பட்டி பிளாக்-1 காப்புக்காடு எல்லைக்கு வெளியே சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்துள்ளது.
தனியார் தோட்டத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து உயர்மின்னழுத்த கம்பியை இழுத்த போது மின்சாரம் பாய்ந்ததில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானையின் தும்பிக்கையில் மின்சாரம் தாக்கியதற்கான காயம் காணப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர், கோயம்புத்தூர் வனத்துறை உதவிப் பாதுகாவலர் மற்றும் வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மின்வாரிய செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யானை மின்சாரம் தாக்கித்தான் உயிரிழந்தது என்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் நடத்திய விசாரணை நடைபெற்று வருகிறது. மின்மாற்றியில் இருந்து வரும் ஒருவித சத்தத்தினால் யானைகள் அதன் அருகே வராது எனக் கூறப்பட்ட நிலையிலும், இந்த யானை எதிர்பாராத விதமாக கம்பியை இழுத்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


