கோவை: மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு மூன்று பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான இளைஞர் கருப்புசாமி. இவர் கடந்த மே 10-ஆம் தேதி காலை அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் துயரமான சூழலிலும், கருப்புசாமியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.
இதை அடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
அவரது கல்லீரல் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோயம்புத்தூரில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கருப்புசாமியின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



