கோவை:தென்மேற்கு பருவமழை காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மலைப்பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பருவமழை தாக்கம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வனத்துறை எச்சரித்துள்ளது.
இதனால், மலைப்பாதைகள் வழுக்கும் அபாயம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 13ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலை ஏற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க கூடாது.
பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இதனால், நாளை முதல் தரிசனத்திற்காக வரத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.



