கோவை: கோவை பேருந்து நிலையங்களில் மது போதையிலான அட்டகாசம் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையங்களில், மது போதையில் உள்ள சிலர் பயணிகள் அமர வேண்டிய இருக்கைகளை ஆக்கிரமித்து படுத்து உறங்குவது வழக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பயணிகள் அமர இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல்கள், போதையில் கிடக்கும் நபர்களிடமும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடமும் செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பேருந்து நிலைய நடைபாதைகளில் மது போதையில் படுத்திருக்கும் நபர்கள் மற்றும் அவர்களிடம் கைவரிசை காட்டும் திருடர்கள் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பேருந்து நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



