கோவை: மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன், ஆர்.ஜி புதூரில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அந்த மாணவன், கடந்த 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
ஆனால் இரவு நேரமாகியும் மாணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவருடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, “ஒரு மர்ம நபருடன் அவர் சென்றுவிட்டார்” என நண்பர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவனின் பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவனுடன் சென்ற சிறுவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிறுவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்கள் அங்கு கிடந்த காலி மதுபாட்டிலால் மாணவனின் தலையில் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்த இரண்டு சிறுவர்கள், உடலை அருகில் குழி தோண்டி புதைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் சிறுவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவர்கள் காட்டிய இடத்தில் இன்று காலை மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் இருகூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



