கோவை: கோவை துடியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி போஸ்டல் காலனியைச் சேர்ந்தவர் சாந்தி (63). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருநெல்வேலியில் நடைபெற்ற கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சாந்திக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக கோவைக்கு திரும்பி வந்து வீட்டைச் சோதனை செய்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாந்தி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவில் மர்ம நபர்கள் அப்பகுதியில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



