கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் வாலிபரிடம் கத்தி காட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சதீஷ் (30), கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று அவர் தனது நண்பருடன் கணேசபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று பேர், சதீஷை வழிமறித்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தி காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சதீஷ் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யுகேந்திரன் (22), போத்தனூர் மேட்டூரைச் சேர்ந்த முகமத் இஸ்மாயில் (28), மற்றும் போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்த லிங்க பூபதி (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



