கோவை: கோவையில் இன்று அதிகாலை லாரி மற்றும் அரசு பஸ் மோதிய விபத்தில், பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
வெளிமாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று இன்று அதிகாலை அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணா சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் லாரியை டிரைவர் வளைவில் திருப்பியுள்ளார்.
அந்த நேரத்தில் காந்திபுரம் பகுதியில் இருந்து வந்த அரசு பஸ் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று, எதிரே இருந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு நின்றது.
இந்த விபத்தில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் தூண்கள் சேதமடைந்தன. பஸ்சில் இருந்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
ஆனால் லாரி டிரைவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை நேரத்தில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



