கோவை: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே வேடப்பட்டி வன்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர் (44). தொழிலாளியான இவர், குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
குடிப்பழக்கம் கொண்ட சங்கர், அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று தனது தாயார் சாந்தம்மாளிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.
பின்னர், கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு லாட்ஜில் தனது இரண்டு நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது, சங்கர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



