கோவை: பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் புகைப்படங்கள் இல்லாமல் அண்ணாமலைக்கு கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் அன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முக்கியமான அறிவிப்பை அறிவிப்பார் என்று கூறப்படும் நிலையில் கோவையில் தலைவா! தரணி ஆள வா..! என்று அண்ணாமலைக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அரசியல் சார்ந்த முக்கிய அறிவிப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது.
இந்நிலையில் கோவையில் உத்தம் அறக்கட்டளையின் தலைவரும் கோவை பாஜக முன்னாள் மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி கோவை மாநகரில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் அண்ணாமலையின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு “தலைவா! தரணி ஆள வா..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் பாஜகவின் தாமரை சின்னமோ பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்களின் புகைப்படமோ இடம்பெறவில்லை.



