கோவை: டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி, 58 வயது பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த 58 வயது பெண், தனது மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். அவரது கணவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா காலத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, கணவரின் ஓய்வூதிய பணப்பலனாக கிடைத்த ரூ.18 லட்சத்தை அவர் தனது வங்கி கணக்கில் வைத்திருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தனது மகளுடன் வடவள்ளி வந்திருந்தார். தேர்தலுக்குப் பிறகு மகள் சென்னை திரும்பிய நிலையில், அந்த பெண் மட்டும் வடவள்ளியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ரூ.2.50 கோடிக்கும் மேல் பணம் பரிமாறப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் “டிஜிட்டல் அரஸ்ட்” செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதோடு, வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், வெளியே சென்றால் கண்காணித்து வரும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பெண், 18 நாட்கள் வீட்டிலேயே இருந்துள்ளார்.
பின்னர், அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறிய மர்ம நபர்கள், கணக்கில் உள்ள பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். ஆய்வு முடிந்ததும் பணம் திருப்பி வழங்கப்படும் என நம்பவைத்துள்ளனர்.
இதனை நம்பிய பெண், தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.18 லட்சத்தை அவர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், ஒரு வாரம் கடந்தும் பணம் திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவர் விசாரித்தபோது, டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் மோசடியில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



