கோவை: பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலையின் ‘We the Leader’ அமைப்பில் அண்ணாமலை ஆதரவாளர்கள் இணைந்தனர்.
பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சி தமக்கான இடம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டுதான் அண்ணாமலை அதிலிருந்து வெளியேறியுள்ளார் என்றும், அவரது தலைமையில் புதிய அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், பாஜக முன்னாள் மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சியில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இக்கூட்டத்தில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை புதிதாகத் தொடங்கியுள்ள ‘We the Leader’ (வீ தி லீடர்) அமைப்பில் உறுப்பினர்களாகச் சேருவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பாலாஜி உத்தமராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது.
பாஜக உறுப்பினர் பதவியை அண்ணாமலை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாங்களும் அக்கட்சியிலிருந்து விலகி புதிய அமைப்பில் இணைந்துவிட்டோம். இதுவரை தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வரை இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இதனை பாஜகவின் ‘பி டீம்’ (B-Team) என்று பார்க்க முடியாது. பாஜகவினர் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும், பல்வேறு மாற்று அரசியல் கட்சிகளில் இருந்தும், குறிப்பாக திமுகவில் இருந்தும் கூட மக்கள் இதில் இணைந்து வருகின்றனர்.
இந்த அமைப்பில் நடிகர் ரஜினிகாந்தின் பங்களிப்பு (ரோல்) என்ன என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்ட அவர், பொதுத் தேர்தலில் இந்த அமைப்பு போட்டியிடும் என்று தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அது இடைத்தேர்தலாகவோ அல்லது உள்ளாட்சித் தேர்தலாகவோ இருக்கலாம்.
அண்ணாமலை இன்னும் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர் என்ன அறிவிப்பார் என்ற புரிதல் எங்களுக்கு உண்டு. அவரது கொள்கையைப் பின்பற்றியே நாங்கள் பின்னால் வந்துள்ளோம், என்றார்.
எங்கள் சித்தாந்தம் வேறு
பாஜக இதனால் உடையவில்லை என்று தெரிவித்த பாலாஜி உத்தமராமசாமி, “பாஜகவின் சித்தாந்தம் வேறு, எங்களுடைய தற்போதைய சித்தாந்தம் வேறு. இதனால் பாஜகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது சரிதான். அண்ணாமலை பாஜகவில் ஒரு மேனேஜராக இருக்க விரும்பவில்லை. வருங்காலத்தில் தமிழக அரசியலில் தவெக விஜய் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவர் மட்டும்தான் பிரதானமாக இருப்பார்கள், என்று கூறினார்.


