கோவை : நீதிமன்ற வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வடமாநில வாலிபரின் மரணம், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (1-ம் தேதி) காலை நீதிமன்ற வளாகத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.
அப்போது நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் உள்புறத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் ரத்த காயங்களுடன் தரையில் கிடப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அந்த வாலிபரின் உடலை பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் வீதியில் நடந்து சென்றபோது, நாய் ஒன்று அவரை கடிக்கத் துரத்தியுள்ளது. இதனால் அலறியடித்துக்கொண்டு ஓடிய அந்த வாலிபர், நாயிடமிருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் பின்பக்க காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்தது பதிவாகியிருந்தது.
இதனால் போலீசார், அந்த வாலிபர் வேகமாக ஓடியபோது இருட்டில் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் என கருதினர். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.
இதற்கிடையே உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையை போலீசார் சோதித்துப் பார்த்தபோது, அதில் வெறும் 250 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது. அவரைப் பற்றிய அடையாள அட்டைகளோ அல்லது வேறு எந்த விவரங்களோ கிடைக்கவில்லை.
அவர் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது வடமாநில தொழிலாளி என்பது மட்டும் தெரியவந்தது. இதனால் அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வடமாநில வாலிபரின் பிரேத பரிசோதனை அறிக்கையை டாக்டர்கள் போலீசாரிடம் அளித்தனர். அதில், வடமாநில வாலிபரின் நெற்றியில் இருந்த ரத்த காயம் கீழே விழுந்ததால் ஏற்படவில்லை என்றும், அவரை கூர்மையான அல்லது கனமான பொருளால் தாக்கியதில் ஏற்பட்ட காயம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், போலீசார் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை மீண்டும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
வடமாநில வாலிபரை யாராவது தாக்கிய பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்தாரா அல்லது நீதிமன்ற வளாகத்திற்குள் அவரை யாராவது தாக்கியதால் உயிரிழந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


