கோவை: பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவையில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு அதனை எதிர்கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் பொழுது ஆங்காங்கே மழை நீர் தேங்கி விடுவதாலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாலும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதனை தடுக்கும் விதமாக அனைத்து நீர் நிலைகளையும் சுத்தப்படுத்தி அதற்கான பாதைகளை உருவாக்குவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை வலாங்குளம் பகுதியில் படர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளானது துவங்கி உள்ளது. இயந்திரங்களைக் கொண்டு அனைத்து ஆகாயத்தாமரைகளும் அகற்றப்பட்டு வருகிறது மேலும் குளங்களில் உள்ள குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து இந்த குளத்திற்கு வந்தடையும் நீர் வழித்தடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
வலாங்குளத்தில் ஜூலை மாதம் வெளிநாட்டு பறவைகளும் அதிகமாக வரக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


