கோவை: கோவையில் பி.எம் விகாஸ் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில், நபார்டு ஆலோசனை சேவைகள் கழகம் மற்றும் பெங்களூரு ஆதித்யா பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தும், “PM VIKAS – பிரதம மந்திரி விகாஸ்” திறன்மேம்பாடு பயிற்சி திட்டத்தின் துவக்க விழா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன், வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் சோமசுந்தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், நபார்டு அமைப்பைச் சேர்ந்த முகுந்தராஜ், தோட்டக்கலைத் துறை தலைவர் வெங்கடேசன், ஆதித்யா நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டு வேளாண் துறையில் திறன் மேம்பாட்டுக்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
இத்திட்டத்தில், கோவை பொள்ளாச்சி ஈரோடு நாமக்கல் தஞ்சாவூர் திருச்சி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் நான்கு மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில் வேளாண்மையின் பல்வேறு துறைகள் குறித்த நேரடி களப்பயிற்சி வழங்கப்படும் எனவும், மத்திய மாநில அரசுகள் சார்பில் பயிற்சி பெறுபவர்களுக்கு நிதி உதவி மாதம்தோறும் வழங்கப்படும் எனவும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பயிற்சி வகுப்பில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், மகளிர் மற்றும் இளம் பட்டதாரிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இத்திட்டத்தில் இணைய, 9443572956 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.


