கோவை: பயணிகள் ஆட்டோக்களில் சரக்குகள் ஏற்றிச் செல்வது தடுக்கப்படாமல் இருப்பதால் கடும் இழப்பைச் சந்தித்து வருவதாக கோவையைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில், அவ்வப்போது இந்த ஆட்டோக்கள் மூலம் சரக்குகளும் ஏற்றிச் செல்லப்படுவதாக சரக்கு ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, கணபதி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆட்டோக்களில் வணிகச் சரக்குகளையும் ஏற்றிச் செல்ல அனுமதிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஜான் பீட்டர் கூறுகையில்,
“கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, பயணிகள் ஆட்டோக்களில் வணிகச் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
எங்களது சரக்கு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், பயணிகள் ஆட்டோக்களில் சரக்குகள் ஏற்றிச் செல்வதை யாரும் கண்டுகொள்வதில்லை.
இதனால் ஒரு ஆட்டோவுக்கு நாளொன்றுக்கு ரூ.600 வரை இழப்பும், மாதத்திற்கு ரூ.50,000 வரை வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
எனவே, பயணிகள் ஆட்டோக்களில் வணிகச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


