கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே தாயை பிரிந்து மீட்கப்பட்ட குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காக ஆனைமலை கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறுமுகை லிங்காபுரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சுமார் 3 வயதுடைய ஆண் குட்டி யானை ஒன்று தாயை பிரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை மீட்டு, அதன் தாய் மற்றும் கூட்டத்துடன் மீண்டும் சேர்க்க பல நாட்கள் முயற்சி மேற்கொண்டனர். எனினும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து குட்டி யானையின் நலனை கருத்தில் கொண்டு, சிறுமுகை பெத்திக்குட்டை மோதூர் வனப்பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வனவிலங்கு மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.
அங்கு வன கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கோழிக்கமுத்தி முகாமிலிருந்து வரவழைக்கப்பட்ட பாகன்களின் உதவியுடன் நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தமிழக அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின் பேரிலும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், குட்டி யானையை கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று அதிகாலை 5 மணியளவில் குட்டி யானை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது.
பயணத்தின் போது யானைக்கு உடல் அழுத்தம் ஏற்படாமல் இருக்க அதிகாலை நேரம் தேர்வு செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அனுபவமிக்க மாவூத்துகள், வனத்துறை பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் கோழிக்கமுத்தி முகாமில் குட்டி யானைக்கு தொடர்ந்து சிறப்பு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



