கோவை: போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 2026-ம் ஆண்டில் இன்று (28.06.2026) நடைபெறவுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்தானது போலியோ நோயை அறவே ஒழிப்பதற்காக வழங்கப்படுகிறது.
சென்ற 2024 ஆம் ஆண்டு 3.01 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 2,97 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1124 மையங்களும், நகர்ப்புறங்களில் 491 மையங்களும் என மொத்தம் 1615 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 32 மையங்கள் மற்றும் 22 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6345 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே, அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான இன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார்தெரிவித்துள்ளார்.



