கோவை: ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவில் நவதானிய ராகு கேது சர்ப்பங்களாலும், வேப்பிலை வனத்தாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆடி மாதம் துவங்கியது முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நான்காவது ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை தேர்முட்டி- பெரியகடை வீதி சாலையில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த வாரம் ராகு கேது சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு கோவில் முழுவதும் சர்ப்பங்களாலும் வேப்பிலை வனத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கோவில் நுழைவாயில் பாம்பு புற்றுப்போல் வடிவமைக்கப்பட்டு பக்தர்கள் அதற்குள் நுழைந்து கோவிலுக்குள் செல்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி ராகு கேது சிறப்பு பூஜையை குறிப்பிடும் வகையில் கோவில் நுழைவாயிலில் இருந்து சன்னிதானம் வரை 108 அடி கொண்ட நவதானியங்கள், கடல் சிற்பிகளால் ஆன ராகு கேது சர்ப்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
மாகாளியம்மன் சர்ப்பத்தின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ராகு கேது சர்ப்பத்தை வழிபட்டு பின்னர் அம்மனை வழிபட்டனர்.

ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்காக இந்த வாரம் ராகு கேது சர்ப்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





