கோவை: உக்கடம் பகுதியில் நள்ளிரவில் வாலிபரின் வீட்டை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமார்த்தாண்டம் (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சந்தோஷ் என்பவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த விக்கிரமார்த்தாண்டம், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து, நீதிமன்ற உத்தரவின்படி தினமும் பெரியகடை வீதி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு அவரது வீட்டிற்கு வந்த சிலர் வெளியே நின்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது விக்கிரமார்த்தாண்டம் வெளியே வராததால் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
Also Read: கணபதியில் துணிகர திருட்டு; தலையணைக்கு அடியில் இருந்த பீரோ சாவியை எடுத்து நகை கொள்ளை
இதையடுத்து, மறுநாள் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் மீண்டும் அவரது வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டுள்ளது. ஜன்னல் வழியாக பார்த்த விக்கிரமார்த்தாண்டம், வெளியே பிரசாந்த், மணி (எ) உச்சான், தவுபிக், பசுபதி மற்றும் விஷ்வா ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் கதவை திறக்குமாறு மிரட்டிய அந்த கும்பல், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அரிவாளைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் இருந்த விக்கிரமார்த்தாண்டத்தின் தாய், அண்ணன் மற்றும் மனைவி அச்சத்தில் கதறி அழுதபடி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கெஞ்சியுள்ளனர். இருப்பினும், “வெளியே வந்தால் உயிருடன் விடமாட்டோம்” என்று மிரட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்கிரமார்த்தாண்டம் அளித்த புகாரின் பேரில், பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய மணி (எ) உச்சான் (26), தவுபிக் (20), பசுபதி (21), விஷ்வா (24) மற்றும் பிரசாந்த் (22) ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீட்டை முற்றுகையிட்டு வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்த சம்பவம் உக்கடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





