கோவை: பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூரைச் சேர்ந்த சூர்யா (30), தற்போது கோவை ரத்தினபுரி, கண்ணுசாமி கவுண்டர் வீதி, குறுக்கு சந்து-2 பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா, பின்னர் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு கோவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த 6.11.2025 முதல் நீதிமன்ற விசாரணைக்கு சூர்யா தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் (Non-Bailable Warrant) பிறப்பித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ரத்தினபுரி போலீசார் தனிப்படை அமைத்து சூர்யாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த சூர்யாவை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





