கோவை: மது அருந்த வராததால் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை குனியமுத்தூர் நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் காஜா உசேன் (37). இவர், நேற்று குனியமுத்தூர்-பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்திவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவருக்கு பழக்கமான கார்த்திக் ராஜா (31) என்பவர், காஜா உசேனை மீண்டும் மது அருந்த அழைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த காஜா உசேன் அங்கிருந்து சென்றார். இதனால் கார்த்திக் ராஜா ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் காஜா உசேனை திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது கார்த்திக் ராஜா, அங்கு கிடந்த கல்லை தூக்கி காஜா உசேனின் தலையில் போட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள் கார்த்திக் ராஜா அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் பலத்த காயமடைந்த காஜா உசேனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, குனியமுத்தூர் திருநகர் காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (31) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் போதைப்பொருட்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மது அருந்த வராததால் நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
kuniyamuthur-friend-stone-attack-murder-attempt-coimbatore
வேலாண்டிபாளையத்தில் வழிப்பறி…
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித்ரே(32). இவர் கோவை வேலாண்டிபாளையத்தில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம் தேதி அவர் வேலை முடிந்து தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் வேலாண்டிபாளையம் பொங்காலியம்மன் கோயில் அருகே சென்ற போது, அவரை வழிமறித்த 4 பேர் கும்பல் பணம் கேட்டனர்.
அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 3,500ஐ பறித்து தப்பி சென்றனர். இது குறித்து ரஞ்சித்ரே சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வெங்கிடாபுரத்தை சேர்ந்த வாசு(24), பிஎன் புதூரை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி(24) ஆகிய இருவரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.





