கோவை : கோவை சின்னவேடம்பட்டியில் வாலிபரை கல் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் என்ற சங்கர் (24). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி இரவு 8 மணியளவில் சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் சுடுகாடு அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், சிவசங்கரிடம் ‘பிரகாஷ்’ என்பவர் குறித்து விசாரித்துள்ளனர். அதற்கு சிவசங்கர், தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சிவசங்கரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களில் ஒருவர் அங்கிருந்த கல்லை எடுத்து சிவசங்கரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும், மற்ற 3 பேரும் சிவசங்கரை கைகளால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிவசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவசங்கர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிவசங்கரை தாக்கியது சின்னவேடம்பட்டி கந்தசாமி நகரைச் சேர்ந்த மோகன்குமார் (23), அஞ்சுகம் நகரைச் சேர்ந்த கோகுல் (19), சுப்பநாயக்கன்புதூரைச் சேர்ந்த ராகுல் (22), மணியகாரன்பாளையம் அன்பு நகரைச் சேர்ந்த கீர்த்திஸ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





