கோவை: கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் கோகுலம் பார்க் ஹோட்டல் எதிரே “கோயமுத்தூர் அக்வா பார்க்” என்ற பெயரில் தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் பெரிய அளவிலான பொழுதுபோக்கு இடங்கள் குறைவாக உள்ள நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து ரசிக்கும் வகையில் புதிய பொழுதுபோக்கு இடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அவினாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில், கோகுலம் பார்க் ஹோட்டலுக்கு நேர் எதிரே “கோயமுத்தூர் அக்வா பார்க்” என்ற பெயரில் பிரமாண்டமான மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட கடல் மீன்கள் மற்றும் அலங்கார மீன்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய மீன்கள் கண்காட்சி அரங்கமாக கூறப்படும் இந்த இடத்தில், ஒரு கிராம் அளவிலான மிகச் சிறிய மீன்கள் முதல் சுமார் 40 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் வரை கண்டு ரசிக்கலாம்.
விதவிதமான நிறங்கள் மற்றும் வடிவங்களில் உள்ள மீன்கள், பெரிய அக்வேரியங்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசிக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்த அக்வா பார்க்கின் முக்கிய சிறப்பம்சமாக வண்ணக்கிளிகள் இடம்பெற்றுள்ளன.
பறவைகளுக்கான உணவை பார்வையாளர்கள் கைகளில் வைத்துக் கொண்டால், அந்த கிளிகள் அருகில் வந்து கைகளில் அமர்ந்து உணவை உண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பறவைகளுக்கு உணவளிக்கும் இந்த அனுபவம் குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.

இதுமட்டுமின்றி, நெருப்புக்கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த அரங்கில் இடம்பெற்றுள்ளன. இதனால் இது வெறும் மீன்கள் கண்காட்சி அரங்கமாக மட்டுமல்லாமல், குடும்பத்துடன் வந்து நேரத்தை செலவிடக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு இடமாகவும் அமைந்துள்ளது.
பார்வையாளர்களின் வசதிக்காக உணவுக்கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முழு வளாகமும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னியம்பாளையம் பகுதியில் கோகுலம் பார்க் ஹோட்டலுக்கு நேர் எதிரே அமைந்துள்ள இந்த “கோயமுத்தூர் அக்வா பார்க்”, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ.200 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் புதிய இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட விரும்புபவர்களுக்கு, கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த “கோயமுத்தூர் அக்வா பார்க்” சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VIDEO
பறவைகள் கூட்டமாக உங்கள் மீது வந்து அமர்ந்துகொள்ளும்… கோவையில் புதிய ஸ்பாட்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
Subscribe
News Clouds Coimbatore
பறவைகளுடன் நேரத்தை செலவிடலாம், நூற்றுக்கணக்கான மீன்களை கண்டு ரசிக்கலாம், குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அனுபவத்தையும் பெறலாம்.





