கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை சர்ச் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் கேரளாவிலும் மத போதகம் செய்து வருகிறார்.
இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம், தனக்குச் சொந்தமாக கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் விருந்து ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த விருந்துக்கு ஜான் ஜெபராஜின் மாமனார் தத்தெடுத்து வளர்த்த 17 வயது சிறுமியும், அவரது தோழியான 14 வயது சிறுமியும் வந்தனர்.
அப்போது சிறுமிகள் இருவருக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவத்தை நீண்ட நாட்களாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் கூறினார்.

அதிர்ந்து போன பெற்றோர் இதுகுறித்து, கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.