கோவை: கிராம ஊராட்சிகளில் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்தை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்திலுள்ள 228 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கண்ணாடி இழை (Optical fiber cable) 85% மின்கம்பங்கள் மூலமாகவும், 15% தரைவழியாகவும் இணைக்கப்படுகிறது.
பாரத் நெட்
இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 228 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது.
இத்திட்டத்திற்கான Rack/UPS உள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், POP பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.
கண்ணாடி இழை கேபிள்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக் கூடாது என தடைசெய்கின்றனர்.
அரசின் உடைமை
இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது.
மேலும், விளைநிலங்களில் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எந்தவிதமான உலோக பொருட்களும் இல்லை, எனவே இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம்.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு (Optical Fiber Cable) உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள் ஆகும்.
எச்சரிக்கை
மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைசெய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.