கோவை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்றதாக கோவையில் கைது செய்யப்பட்ட கொடூர தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி (35). இவரது மனைவி தமிழரசி (30). இவர்களது குழந்தை அபர்ணாஸ்ரீ (4).
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு
தமிழரசியின் நடத்தை சரியில்லாததால் ரகுபதி அவரது மனைவியை பிரிந்து சென்றார். அதன் பின்னர் தமிழரசி தனது குழந்தை அபர்ணாஸ்ரீயுடன் வசித்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வசந்த் அடிக்கடி தமிழரசியின் வீட்டுக்கு வந்து தனிமையில் சந்தித்து சென்றுள்ளார்.
இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து தமிழரசியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் தமிழரசியை கண்டித்து கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி வந்தனர்.
ஆனால் தமிழரசி அதனைக் கண்டு கொள்ளாமல் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை அபர்ணாஸ்ரீ வீட்டில் இருந்த போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விட்டதாக தமிழரசி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு டாக்டர்கள் குழந்தை அபர்ணாஸ்ரீயை பரிசோதனை செய்த போது குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தெரிந்து தமிழரசியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்கள் குழந்தையை பார்த்து கதறி அழுதனர். மேலும், இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது தமிழரசியின் குடும்பத்தினர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தையின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் தமிழரசியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று குழந்தை எவ்வாறு இறந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் தமிழரசி தனது குழந்தை அபர்ணா ஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், கள்ளக்காதலன் வசந்த் குழந்தையை பிரிந்து வந்தால் தன்னுடன் குடும்பம் நடத்துவதாக தெரிவித்ததால் குழந்தையை கொன்று நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தமிழரசி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தார்.
அவருக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் நேற்று முன்தினம் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் இளம்பெண் தமிழரசி, தனது 4 வயது குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.